Nov 5, 2013

சுட்டகதை - விமர்சனம்



தாறுமாறான ஓட்டைகளுடன்... சுட்ட கதை.

கோரமலை பழங்குடி மக்கள் தலைவனான ஒட்டகம் (எம்.எஸ்.பாஸ்க்ர), தன் நெற்றியில் ‘தோட்டா’ தாங்கியபடி, சிரித்த முகத்துடன் சரியும் அந்த ‘திகில்’(?!) காட்சியில் தொடங்குகிறது... சுட்ட கதை. ராம்கியும் (பாலாஜி), சங்கிலியும் (வெங்கி) கோரமலை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்கிறார்கள். ஒட்டகத்தை கொன்றது யார்? என கண்டுபிடிக்க அல்ல! எந்நேரமும் சமோசாவும், தூக்கமுமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் திருமேனியின் (நாசர்) வீட்டு வேலைகளைச் செய்ய! சுட்டகதை ‘நகைச்சுவை படம்’ என்பதால், இந்த இடத்தில் நாசர் சிரிக்கிறார். பாவம்... அவர் மட்டுமே சிரிக்கிறார்! இப்படி, நகைச்சுவை ததும்ப(!) தொடங்கும் கதையில், இடைவேளையின்போது ஒரு ‘ட்விஸ்ட்’. கான்ஸ்டபிள் ராம்கியும், ஜீப் ஓட்டுனரான சங்கிலியும், ‘கெட்ட’ போதையில், திருமேனியின் துப்பாக்கியை எடுத்து விளையாட... டுமீட்! சுட்டது ராம்கி. சத்தமில்லாமல் சுருண்டது... ட்விஸ்ட் (ஜெயப்பிரகாஷ்). (செம ‘ட்விஸ்ட்’டுப்பா!). ஆனா, செத்தது ஆலிவர் ட்‌விஸ்ட் இல்ல! பின்னே! வீரகேசரி (ஆர்.எஸ்.சிவாஜி). அடடே... இது யாரு? அது... அது... அதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும், ‘பென்சில்’ மீசை வைத்திருக்கிறார்கள் என்பது படத்தின் சிறப்பம்சம்! மற்றபடி... ‘எப்படி நடிச்ச ஆளுப்பா! இவரு போய்...’ என, ரசிகனை வருத்தப்பட வைக்கிறார் நாசர். படத்தின் நாயகர்கள் என சொல்லப்படும் இருவரும், ஏதேதோ செய்தும், பேசியும் வித்தை காட்டுகிறார்கள். ஆனால்... அத்தனையும் வீண்! படத்தில் ஒரு நாயகியும் உண்டு. அடிக்கடி பிணம் சுமக்கும் அந்த பாவையின்பெயர் சிலந்தி(லஷ்மிபிரியா)!

‘கதை வேண்டாம்! வித்தியாசமான விளம்பரங்கள் போதும். ரசிகன் நிச்சயம் திரை அரங்கிற்கு வருவான்!’ என்ற நம்பிக்கையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சுபு. அவருக்கு வெற்றி! ரசிகனுக்கு.... மரண அடி!

மொத்தத்தில் ‘சுட்ட கதை’ - ‘அது வருது ஓடிருங்க’.

No comments:

Post a Comment