Apr 18, 2014

உதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்

தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் நண்பேண்டா. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியம் கேமரா. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தேர்தல் காலம் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தேர்தல் எபெக்டோடு வெளியியிட்டிருக்கிறார் உதயநிதி. படத்தின் பின்னணியை பட யூனிட் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது...

உதயநிதி நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிப்பார். பல ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் நயன்தாரா, வெட்டி ஆபீசர் உதயநிதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். திடீர்னு மாஸ் அட்ராக்ஷன் வேணும்னா அரசியல்தான் ஒரே வழின்னு நண்பன் சந்தானம் அட்வைஸ் பண்ண உள்ளூர் அரசியலில் குதிக்கிறார் உதயநிதி. லோக்கல் பிரச்னைகளுக்காக போராடி வெற்றி பெறும் உதயநிதி, இதே பாணியை காதலுக்கும் செய்தால் என்ன என்று யோசிக்கிறார். நயன்தாராவிடன் காதல் கோரிக்கை வைத்து உண்ணாவிரம், ஆர்ப்பாட்டம், மறியல்னு பல அகிம்சை போராட்டங்களை நடத்துகிறார். அதுதான் பர்ஸ்ட் லுக் போட்டோவின் பின்னணி என்கிறார்கள்.

Apr 17, 2014

பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்? ஹரி விளக்கம்

பொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: படத்தின் கதை களம் கோவை. சென்னை மாதிரி அதுவும் வளர்ந்த நகரம் அங்கு மார்டன் டிரஸ்களில் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். அப்படி ஒரு பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். மார்டனான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அதே நேரத்துல நம்ம ஊர் சாயல் இருக்கணும். அதுக்கு ஸ்ருதி தான் சாய்ஸ்னு முடிவு பண்ணி கதை சொன்னோம் உடனே ஓகே சொல்லிட்டாங்க.

வழக்கமான என்னோட படம் மாதிரி இல்லாம இதுல கொஞ்சம் மார்டனா லவ் போஷன் இருக்கும். ஹீரோவோடு ரொமான்ஸ், டுயட்டுன்னு இல்லாம படம் முழுக்க ஸ்ருதிக்கு வேலை இருக்கு. அவ்வளவு முக்கியமான கேரக்டர். படத்தோட கதை கோவையில் ஆரம்பித்து பீகார்ல முடியும். நாட்டுல இப்ப இருக்குற ஒரு முக்கியமான பிரச்னையை எதிர்த்து ஹீரோ போராடுகிற கதை. அதை என்னோட பாணியில் பேமிலி செண்டிமெண்டோடு சொல்கிறேன். 7 வருஷத்துக்கு முன்பு விஷாலுடன் தாமரபரணி பண்ணினேன். அப்போ அவர் ஆக்ஷன் ஹீரோவா மட்டும் இருந்தார். இப்போ பெர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாவும் வளர்ந்திருக்கார். இரண்டுக்குமே பூஜையில் வேலை இருக்கு என்கிறார் ஹரி.

தெனாலிராமனுக்கு சிக்கல் தீர்ந்தது!!

வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை (ஏப்ரல் 18) ரிலீசாகிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து அவமானப்படுத்தி இருப்பதாக சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிலர் வழக்கும் போட்டனர். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) வடிவேலு, படத்தை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "இது காமெடி படம்தான் படத்தில் கிருஷ்ணதேவராயரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம்" என்றார். பிறகு தெலுங்கு அமைப்புகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். சுமார் இரண்டு மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வடிவேலு

பேச்சு வார்த்தைக்கு பிறகு வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: உலக மொழி பேசும் அத்தனை பேரும் என் உடல் மொழியை ரசிக்கிறார்கள். தமிழ் மொழி தெரியாதவர்கள்கூட என்னை ரசிக்கிறார்கள். எனக்கு பகை மொழி எதுவும் கிடையாது. இதுவரை ஒரு படத்தில்கூட வல்கராகவோ, வன்முறையாகவோ நடிச்சதில்லை. இந்தப் படமும் யாருடைய மனதையும் புண்படுத்துகிற நோக்கில் எடுக்கவில்லை. பல் முளைக்காத குழந்தையில் இருந்து பல் விழுந்த கிழவன் வரை ரசிக்கிற மாதிரியான படம். தயவு செய்து இந்த படத்தை வைத்து மொழிச் சண்டைய உருவாக்காதீர்கள் என்று தமிழ் மக்கள் சார்பில் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தெலுங்கு அமைப்புகள்

தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி கூறியதாவது: எங்களின் சந்தேகங்களுக்கு வடிவேலு நல்ல முறையில் விளக்கம் அளித்தார். படத்தில் கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவிகள் 52 குழந்தைகள் என்ற வசனத்தை நீக்க ஒத்துக் கொண்டார். படத்தின் டைட்டில் கார்டில் இது கற்பனை கதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்ற வாசகத்தை போடவும் ஒத்துக் கொண்டார். படத்தை தெலுங்கு அமைப்புகளுக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்று கேட்டோம். அதற்கும் ஒத்துக் கொண்டார். இதனால் நாங்கள் சமரசமாகி விட்டோம். தமிழ்நாடு கவர்னர் ரோசையா இதில் தலையிட்டு அவர் அறிவுறுத்தியதின் பேரில் இந்த சமசரம் ஏற்பட்டுள்ளது. என்றார்

தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

இதற்கிடையில் படத்துக்கு தடைகேட்டு தெலுங்கு அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "படத்துக்கு முறைப்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு எதுவும் இல்லை" என்று கூறப்பட்டிருந்தது. படத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் "இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல. இது கற்பனை கதை" என்று கூறப்பட்டிருந்தது. இரண்டு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி இரு மனுக்களையும் ஏற்றுக் கொண்டு படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஒரு வழியாக தெனாலிராமன் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு நாளை வெளிவருகிறார். மக்கள் என்ன தீர்ப்பு தரப்போகிறார்கள் என்பது நாளை மாலை தெரிந்து விடும்.