வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை (ஏப்ரல் 18) ரிலீசாகிறது.
இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து
அவமானப்படுத்தி இருப்பதாக சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சிலர் வழக்கும் போட்டனர். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) வடிவேலு,
படத்தை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு
அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "இது காமெடி படம்தான் படத்தில்
கிருஷ்ணதேவராயரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம்" என்றார். பிறகு
தெலுங்கு அமைப்புகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். சுமார்
இரண்டு மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
வடிவேலு
பேச்சு
வார்த்தைக்கு பிறகு வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: உலக மொழி பேசும்
அத்தனை பேரும் என் உடல் மொழியை ரசிக்கிறார்கள். தமிழ் மொழி
தெரியாதவர்கள்கூட என்னை ரசிக்கிறார்கள். எனக்கு பகை மொழி எதுவும் கிடையாது.
இதுவரை ஒரு படத்தில்கூட வல்கராகவோ, வன்முறையாகவோ நடிச்சதில்லை. இந்தப்
படமும் யாருடைய மனதையும் புண்படுத்துகிற நோக்கில் எடுக்கவில்லை. பல்
முளைக்காத குழந்தையில் இருந்து பல் விழுந்த கிழவன் வரை ரசிக்கிற மாதிரியான
படம். தயவு செய்து இந்த படத்தை வைத்து மொழிச் சண்டைய உருவாக்காதீர்கள்
என்று தமிழ் மக்கள் சார்பில் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தெலுங்கு அமைப்புகள்
தெலுங்கு
அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி
கூறியதாவது: எங்களின் சந்தேகங்களுக்கு வடிவேலு நல்ல முறையில் விளக்கம்
அளித்தார். படத்தில் கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவிகள் 52 குழந்தைகள் என்ற
வசனத்தை நீக்க ஒத்துக் கொண்டார். படத்தின் டைட்டில் கார்டில் இது கற்பனை
கதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்ற வாசகத்தை
போடவும் ஒத்துக் கொண்டார். படத்தை தெலுங்கு அமைப்புகளுக்கு போட்டுக்காட்ட
வேண்டும் என்று கேட்டோம். அதற்கும் ஒத்துக் கொண்டார். இதனால் நாங்கள்
சமரசமாகி விட்டோம். தமிழ்நாடு கவர்னர் ரோசையா இதில் தலையிட்டு அவர்
அறிவுறுத்தியதின் பேரில் இந்த சமசரம் ஏற்பட்டுள்ளது. என்றார்
தடைவிதிக்க கோர்ட் மறுப்பு
இதற்கிடையில்
படத்துக்கு தடைகேட்டு தெலுங்கு அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு
சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "படத்துக்கு முறைப்படி சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு எதுவும் இல்லை" என்று
கூறப்பட்டிருந்தது. படத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் "இது யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல. இது கற்பனை கதை" என்று
கூறப்பட்டிருந்தது. இரண்டு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி இரு
மனுக்களையும் ஏற்றுக் கொண்டு படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி
வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஒரு வழியாக
தெனாலிராமன் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு நாளை வெளிவருகிறார்.
மக்கள் என்ன தீர்ப்பு தரப்போகிறார்கள் என்பது நாளை மாலை தெரிந்து விடும்.