Jan 20, 2014

நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானது



நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திருமணமாகி செட்டிலாக போகிறார் அழகும், குறும்பும் நிறைந்த நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து வரவான நஸ்ரியா நசீம். இவரது அழகும், குறும்புத்தனமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ராஜா ராணியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவு பரபரப்பும் நஸ்ரியா மீது சமீபத்தில் விழுந்தது.

சற்குணம் இயக்கிய நய்யாண்டி படத்தில் நடித்து அவர், அதன்பின்னர் அவர் கிளப்பிய தொப்புள் பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ், வாய்மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க வந்தபிறகு சினிமாவில் சாதித்த பிறகு தான் திருமணம் செய்வேன் என்று சில நடிகைகளை போல் வயதை கடத்தாமல் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார் நஸ்ரியா. ஆம் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகன், பஹத் பாசிலை தான் நஸ்ரியா திருமணம் செய்ய இருக்கிறார். பஹத்தும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உள்ளார். இருவரும் ''எல் பார் லவ்'' என்ற படத்தில் தற்போது நடித்து வருகின்றனர். இந்தபடத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டில் பேசி திருமணத்திற்கான சம்மதத்தை வாங்கிவிட்டனர். அத்தோடு திருமணம் நிச்சயமும் சில தினங்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது. திருமண தேதி முடிவு செய்யவில்லை, இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இத்தகவலை நஸ்ரியாவே கூறியுள்ளார்.

நஸ்ரியா தனது பேஸ்புக்கில், எனக்கும், பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது, உங்களுடைய எல்லோரது வாழ்த்தும் தேவை என்றும் கூறியுள்ளார்.

இதேப்போல் பஹத்தின் தந்தை பாசிலும் இந்த திருமணத்தை உறுதிசெய்துள்ளார். இவர்களது திருமணம் ஆகஸ்ட்டில் நடப்பதாக கூறியுள்ளார்.

Jan 10, 2014

ஜில்லா - விமர்சனம்



ஊருக்கே தாதா மோகன் லால்.அவரோட டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல நடந்த ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின் உயிருக்கு வந்த ஆபத்தில் இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .

காஜில் அகர்வால் போலீஸ் ஆஃபீசர் .ஹீரோயின் போலீஸ்னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது.

மோகன் லாலுக்கு போலீஸ்னாலே ஒரு சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா இருக்கனும்னு. விஜய் அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார்.

ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.

தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது பூஸ்ட் அப் குடுக்கும் படம் தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில் மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .

விஜய் இந்தப்படத்தில் ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில் சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு .

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில் அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ் யூனிஃபார்மில் கலக்கிட்டார்.

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால பரோட்டா பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம்.

புரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை . கடைசி 30 நிமிடங்கள் இழுவை . மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கு. எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

விஜய் ஒரு பாட்டு பாடி இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு பாராட்டு

படம் முழுக்க ஆங்காங்கே வரும் ஜில்லா ஜில்லா தீம் இசை ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது

Jan 9, 2014

ரொமான்ஸ் காட்சிக்கு யாரும் டூப் போடுவதில்லையே? சண்டை காட்சிக்கு மட்டும் ஏன் - அஜீத்


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் நாளை திரைக்கு வருகிறது. அதனால் அரக்க பரக்க ரிலீஸ் வேலைகளில் தீவிரமடைந்துள்ளது வீரம் டீம். இந்த நிலையிலும் அப்படம் பற்றிய கடைசி பேட்டியாக சிலர் டைரக்டர் சிவாவை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

அப்போது சிலர், ரயில் சண்டை காட்சியில் அஜீத் எடுத்த ரிஸ்க் பற்றி அவரிடத்தில் கேட்டதற்கு, அதுதான் படத்தின் ஹைலைட்டே. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல வேண்டும். இதில் நடிப்பதில் ரிஸ்க் என்பதால், டூப் நடிகரை வைத்து எடுத்து விட நினைத்தேன். ஆனால் அஜீத் குறுக்கிட்டு, அதுல என்னதான் ரிஸ்க் இருக்குன்னு பாத்திடுவோமே என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினார். இதனால் அந்த காட்சியை படமாக்கி முடிக்கிற வரைக்கும் ஒரே பயம். ஆனால், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் சண்டை போட்டபடி ஒவ்வொரு கம்பியாக லாவகமாக பிடித்தபடி நடித்தார் அஜீத்.

அந்த காட்சியை முடித்து விட்டு வந்தபோது, ஏன் சார் இப்படியெல்லாம் தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறீங்க? என்று கேட்டபோது, நான்தானே ஹீரோ. அப்ப நான்தானே வில்லன்களை அடிக்கனும். அதை விட்டுட்டு டூப் நடிகரை வச்சு அந்த காட்சியை படமாக்கினால் எப்படி என் ஹீரோயிஸம் முழுமை பெறும் என்றாராம் அஜீத். அதோடு, கதாநாயகியை கட்டிப்பிடிச்சு நடிக்கிற ரொமான்ஸ் காட்சியிளெல்லாம் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளை டூப் நடிகருங்ககிட்டு விடுறது எந்த விதத்திலும் நியாயமே இல்லை. அதனால்தான், லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் நானே பார்த்திடுறதுங்கிற முடிவுக்கு இறங்கிட்டேன் என்றாராம்.

Jan 7, 2014

பிரபல தெலுங்கு நடிகர் தற்கொலை



டிஜிட்டில் சினிமாவின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மாதத்துக்கு பத்து புது ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதயகிரண் தற்கொலை சில பாடங்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.


ஆந்திர மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் உதய்கிரண். பிறப்பிலிருந்தே அழகு. அந்த அழகுதான் அவருக்குள் சினிமா ஆசையை தூண்டியது. உடன் இருந்த நண்பர்களும் அந்த ஆசையை உரம்போட்டு வளர்த்தார்கள். கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமாவுக்குள் நுழைய ஏதுவாக மாடலிங் செய்ய ஆரம்பித்தார். மாடலிங் உலகில் தனித்த அடையாளத்தோடு வளர்ந்தவர் ஒரு ஆங்கில குறும்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கின் முன்னணி இயக்குனர் தேஜாவின் கவனத்துக்கு வந்தார். அவருடைய இயக்கத்தில் உதய்கிரண் நடித்த சித்திரம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.


ஒரே படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் உச்சத்துக்கு போனார். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளின் கனவு நாயகன் ஆனார். அடுத்து நடித்த நுவ்வு நேனு, மனசந்தே நுவ்வே படங்களும் சேர்ந்து ஹாட்ரிக் ஹிட்டடிக்க கமர்ஷியல் மசாலாவுக்குள் சிக்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை இளைஞர்களின் காதல் களமாக்கினார். நுவ்வு நேனு படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.


உதய் கிரணின் இந்த அசுர வளர்ச்சி ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவின் கவனத்தை ஈர்த்தது. அவரை காதலிக்க ஆரம்பித்தார். தன் வீட்டு மருமகனாக்க சிரஞ்சீவியும் விரும்பினார். 2003ம் ஆண்டு தன் மகள் சுஷ்மிதாவுக்கு உதய்கிரணை மணம் முடிக்க நிச்சயம் செய்தார். நிச்சயதார்த்த விழாவும் கோலாகலமாக நடந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரிவில்லை. நிச்சயதார்த்தத்தை முறித்தார் சிரஞ்சீவி. தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயன்றது உதய்கிரணுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு காரணமும், சிரஞ்சீவி மகள் வேறொருவரை காதலித்ததால் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம். எது உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திருமண நிச்சயதார்த்தமும், அதன் முறிவும்தான் உதய்கிரண் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.


சிரஞ்சீவியால் நிராகரிக்கப்பட்டதால் அவரை பகைத்துக் கொண்டு யாரும் உதய்க்கு பட வாய்ப்பு தர முன்வரவில்லை. அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தெலுங்கில் இனி வாழ முடியாது என்று தமிழ்நாட்டுக்கு வந்தார்.

நேராக கே.பாலச்சந்தர் வீட்டிற்கு சென்ற அவரிடம் தன் சோக கதையை சொல்லி அழுதார். நல்ல வாய்ப்பு வரும்போது அழைப்பதாக சொன்னார். பிரகாஷ்ராஜ் பொய் படத்தை தயாரித்தபோது அதில் உதய்யை ஹீரோவாக்கினார். உதய்யின் துரதிர்ஷ்டம் தமிழ்நாட்டிலும் தொடர்ந்தது.


பொய் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வம்புசண்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு, சித்திரம், பெண் சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்றார். இரக்கப்பட்ட சிலர் கொடுத்த வாய்ப்பும் தோல்வியில் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனஆறுதல் வேண்டி தன் தோழி வஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.


அதன் பிறகு சொந்த வாழ்க்கை தோல்விகள் துரத்தியது. பாசத்திற்குரிய அம்மாவின் மரணம். அந்த ஈரம் காய்வதற்குள் அப்பா செய்து கொண்ட மறுமணம் எல்லாமே உதயை துரத்தி துரத்தி அடித்தது. இறுதியில் மரணமே எல்லாவற்றும் தீர்வு என்று முடிவு செய்துவிட்டார்.


தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவம்தானே தவிர அது முடிவல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உதய் சினிமா நட்சதிரமானதே சாதனை தானே. அதற்குமேல் என்ன வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் சினிமா கனவோடு திரியும்போது கேமரா முன் நிற்கும் பாக்கியம் பெற்ற அனைவருமே சாதனையாளர்கள்தான். வெற்றி தோல்வி என்பது அடுத்ததுதான். இன்றைக்கு சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு உதய் நடத்தி சென்றுள்ள பாடம் இது.

தெலுங்கில் பின்வாங்கியது அஜீத்தின் வீரம்!


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் தமிழகமெங்கிலும் பரபரப்பாக பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தமிழில் வெளியாகிற அதே நாளில் வீரு டொக்கடே என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆந்திராவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனவரி 10-ந்தேதி ஆந்திராவில் சங்கராந்தி என்பதால் அங்குள்ள பிரபல ஹீரோக்களான மகேஷ்பாபு நடித்த 1, ராம்சரண் நடித்த எவடு ஆகிய படங்கள் வெளியாகிறதாம். அதனால் பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே கைப்பற்றி விட்டார்களாம்.
ஆக, அஜீத் படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கிய சில தெலுங்கு படங்கள் ஹிட்டாகியிருப்பதோடு, தமன்னா வீரம் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், தெலுங்கிலும் அஜீத்தின் கொடி பறக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், அங்குள்ள ஹீரோக்களுடன் போட்டிக்கோதாவில் இறங்கினால், கிடைக்கிற வசூலும் இல்லாமல் போய் விடும் என்பதால் புத்திசாலித்தனமாக ரிலீஸ் தேதியை பின்தள்ளி வைத்திருக்கிறார்களாம்.